முழு சந்திர கிரகணம் (மார்ச் 3, 2026): ஜோதிட ரகசியங்கள், ஹோலி பண்டிகை நேரம் மற்றும் ராசி பலன்கள்
சிம்ம ராசி மற்றும் பூரம் நட்சத்திரத்தில் கேது கஸ்த சந்திர கிரகணம்
வணக்கம்! வானியல் ரீதியாக கிரகணம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வாக இருந்தாலும், நமது இந்து தர்மத்திலும், வேத ஜோதிடத்திலும் இதற்கு மிக முக்கிய இடம் உண்டு. செவ்வாய்க்கிழமை, மார்ச் 3, 2026 அன்று நிகழவுள்ள இந்த முழு சந்திர கிரகணம், சிம்ம ராசி மற்றும் பூரம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது. ஜோதிட ரீதியாக இதனை நாம் கேது கஸ்த சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம்.
நமது மனம், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளுக்கு காரணமான சந்திரன், இந்த காலகட்டத்தில் நிழல் கிரகமான கேதுவுடன் இணைந்திருப்பதால், இது வானில் நடக்கும் ஒரு வேடிக்கை மட்டுமல்ல, நமது அன்றாட வாழ்க்கையிலும், சிந்தனையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். சில ராசிக்காரர்களுக்கு இது எதிர்பாராத யோகங்களை அள்ளித் தரும், சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
சந்திர கிரகணமும் ஹோலி பண்டிகையும் (2026): சாஸ்திர விளக்கம்
இந்த ஆண்டு (2026) பங்குனி பௌர்ணமியும் சந்திர கிரகணமும் ஒரே நாளில் வருவது குறிப்பிடத்தக்கது. தர்ம சாஸ்திரங்களின்படி, கிரகண தீட்டு (சூதகம்) அல்லது கிரகண நேரத்தில் எந்த சுப காரியங்களோ, பண்டிகைகளோ கொண்டாடக் கூடாது. இதனால் காம தகனம் (ஹோலிகா தகனம்) எப்போது செய்வது என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம்.
சாஸ்திர தீர்வு: மார்ச் 3-ம் தேதி மாலை 6:47 மணிக்கு கிரகணம் முற்றுப்பெற்ற (மோட்சம்) பிறகு, குளித்து முடித்துவிட்டு அதன் பின்னரே காம தகனம் (ஹோலிகா தகனம்) செய்ய வேண்டும். அதற்கு மறுநாள், அதாவது மார்ச் 4, 2026 அன்று ஹோலி பண்டிகையை (வண்ணங்களின் பண்டிகை) கொண்டாடுவது சாஸ்திர சம்மதமாகும்.
கிரகணம் எங்கெங்கு தெரியும்?
இந்த முழு சந்திர கிரகணம் கிழக்கு ஐரோப்பா, ஆசியாவின் பெரும்பாலான பகுதிகள், ஆஸ்திரேலியா, வட மற்றும் தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் நன்றாகத் தெரியும்.
முழு கிரகணம் தெரியும் முக்கிய நகரங்கள்:
நியூயார்க், சிகாகோ, வாஷிங்டன் DC, சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், டெட்ராய்ட், நியூ ஆர்லியன்ஸ், ஹொனலுலு (அமெரிக்கா), மாண்ட்ரீல், டொராண்டோ (கனடா), லிமா (பெரு), மணிலா (பிலிப்பைன்ஸ்), ஹனோய் (வியட்நாம்), மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் (ஆஸ்திரேலியா), தைபே (தைவான்), ஜகார்த்தா (இந்தோனேசியா), ஹாங்காங், குவாத்தமாலா சிட்டி, ஹவானா (கியூபா), பாங்காக் (தாய்லாந்து), சியோல் (தென் கொரியா), சிங்கப்பூர், ஷாங்காய், பெய்ஜிங் (சீனா), சான் சால்வடார் (எல் சால்வடார்), டோக்கியோ (ஜப்பான்), மெக்சிகோ சிட்டி (மெக்சிகோ) மற்றும் யாங்கோன் (மியான்மர்).
பகுதி நேர கிரகணம் தெரியும் நகரங்கள் (இந்தியா உட்பட):
சென்னை, கொல்கத்தா, புது தில்லி, மும்பை (இந்தியா), ரியோ டி ஜெனிரோ, சாவோ பாலோ (பிரேசில்), பியூனஸ் அயர்ஸ் (அர்ஜென்டினா), செயின்ட் ஜான்ஸ் (கனடா), சாண்டியாகோ (சிலி), கராகஸ் (வெனிசுலா), சாண்டோ டொமிங்கோ (டொமினிகன் குடியரசு), டாக்கா (வங்கதேசம்) மற்றும் தாஷ்கண்ட் (உஸ்பெகிஸ்தான்).
இந்தியாவில் சந்திரன் உதயமாகும் போதே கிரகணம் தொடங்கியிருக்கும் என்பதால், இது கிரஸ்தோதய சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. நமது நாட்டில் கிரகணத்தின் இறுதிப் பகுதியை (மோட்ச காலம்) மட்டுமே காண முடியும்.
இந்தியாவில் கோயில்கள் நடை அடைப்பு மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி ரகசியம்
ஆகம விதிகளின்படி, கிரகணத்தின் போது கோயில்களின் நடையை அடைப்பது நமது மரபு. கிரகண காலத்தில் வெளிப்படும் எதிர்மறை கதிர்வீச்சுகள் சிலைகளின் தெய்வீக சக்தியைப் பாதிக்காமல் இருக்கவே இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.
- நடை அடைப்பு (தீட்டு நேரம்): சந்திர கிரகணத்திற்கான தீட்டு (சூதகம்) கிரகணம் தொடங்குவதற்கு 9 மணி நேரத்திற்கு முன்பே தொடங்கிவிடும். மார்ச் 3 அன்று காலை 9:23 மணிக்கே தீட்டு தொடங்குவதால், திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள முக்கிய கோயில்கள் காலை முதலே மூடப்பட்டிருக்கும்.
- நடை திறப்பு: மாலை 6:47 மணிக்கு கிரகணம் முற்றுப்பெற்ற (மோட்சம்) பிறகு, கோயில்களில் சம்ப்ரோக்ஷணம் (சுத்திகரிப்பு) மற்றும் புண்ணியாவதனம் செய்யப்பட்டு, பின்னரே பக்தர்களின் தரிசனத்திற்காக மீண்டும் திறக்கப்படும்.
கிரகண நேரத்திலும் திறந்திருக்கும் ஒரே சிவாலயம் - ஸ்ரீ காளஹஸ்தி:
நாடு முழுவதும் கோயில்கள் மூடப்பட்டிருந்தாலும், ஆந்திராவில் உள்ள
ஸ்ரீ காளஹஸ்தி (வாயு லிங்கம்) சிவன் கோயில் மட்டும் வழக்கம் போல் திறந்திருக்கும். காரணம், இந்த தலம்
ராகு-கேது பரிகார ஸ்தலம் ஆகும். இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் நவக்கிரகங்களையும், 27 நட்சத்திரங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். சுவாமியின் கவசத்தில் கிரகங்களும், நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளதால், எந்த கிரகண தோஷமும் இந்த தலத்தை நெருங்காது. மேலும், கிரகண நேரத்தில் இங்கு ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜைகள் மற்றும் ருத்ராபிஷேகம் செய்வது அளப்பரிய புண்ணியத்தையும், வாழ்க்கையின் தடைகளை நீக்கும் வல்லமையையும் தரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
சென்னை மற்றும் இந்தியாவிற்கான சந்திர கிரகண நேரங்கள் (மார்ச் 2026)
| விவரம் | நேரம் (இந்திய நேரப்படி) |
|---|---|
| பகுதி கிரகணம் தொடக்கம் | மார்ச் 3, 2026, பிற்பகல் 3:20:05 |
| கிரகண உச்சம் | மார்ச் 3, 2026, மாலை 5:03:41 |
| பகுதி கிரகணம் முடிவு | மார்ச் 3, 2026, மாலை 6:47:17 |
| இந்தியாவில் கிரகணம் தெரியத் தொடங்கும் நேரம் | மார்ச் 3, 2026, மாலை 6:23:09 (சந்திரோதயம்) |
| கிரகணம் மறையும் நேரம் | மார்ச் 3, 2026, மாலை 6:47:17 |
| தீட்டு (சூதகம்) தொடங்கும் நேரம் | மார்ச் 3, 2026, காலை 9:23:09 |
| தீட்டு (சூதகம்) முடியும் நேரம் | மார்ச் 3, 2026, மாலை 6:47:17 |
குறிப்பு: உங்கள் ஊரின் புவியியல் அமைப்பைப் பொறுத்து கிரகண நேரங்களில் சில நிமிடங்கள் மாறுபடலாம். உங்கள் ஊருக்கான துல்லியமான நேரத்தை அறிய எங்களது Lunar Eclipse Date & Time Finder கருவியைப் பயன்படுத்தவும்.
|
ஜோதிட ஆலோசனை (கிரகண ராசியின் அடிப்படையில்): இந்த கிரகணம் சிம்மம் ராசி மற்றும் பூரம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது: சுப பலன்கள்: மிதுனம் (3-ம் இடம்), துலாம் (11-ம்), விருச்சிகம் (10-ம்), மீனம் (6-ம்) சராசரி பலன்கள்: மேஷம் (5-ம்), கடகம் (2-ம்), தனுசு (9-ம்), கும்பம் (7-ம்) அசுப பலன்கள்: ரிஷபம் (4-ம்), சிம்மம் (1-ம்), கன்னி (12-ம்), மகரம் (8-ம்) விரிவான பலன்களைப் படிக்க கீழே ஸ்க்ரோல் செய்யவும். |
சாஸ்திர பரிகாரம்
கிரகணத்தால் அசுப மற்றும் சராசரி பலன்களைப் பெறுபவர்கள் கிரகணம் முடிந்த அன்றோ அல்லது மறுநாள் காலையிலோ அருகில் உள்ள நதியில் நீராட வேண்டும் (நதி இல்லை என்றால் வீட்டிலேயே குளிக்கலாம்). பின்னர், ஒரு செம்பு அல்லது எஃகு (ஸ்டீல்) கிண்ணத்தில் நெய் நிரப்பி, அதில் வெள்ளியால் செய்யப்பட்ட சந்திரன் மற்றும் கேதுவின் சிலைகளை மூழ்கும்படி வைத்து சங்கல்பம் செய்து தானம் அளிக்க வேண்டும். இதனுடன் உங்கள் சக்திக்கு ஏற்ப அரிசி மற்றும் கொள்ளு தானம் செய்வதும் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
12 ராசிகளுக்கான கிரகண பலன்கள் மற்றும் எளிய பரிகாரங்கள்
சிம்ம ராசியில் நிகழும் இந்த கேது கஸ்த சந்திர கிரகணம், உங்கள் ராசிக்கு ஏற்றவாறு என்னென்ன மாற்றங்களை கொண்டு வரும் என்பதைப் பார்ப்போம். யாருக்கு யோகம்? யாருக்கு கவனம் தேவை? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்:
மேஷம்: உங்கள் ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்கிறது. குழந்தைகளின் கல்வி அல்லது எதிர்காலம் குறித்த சிறு கவலைகள் மனதில் எழலாம். பங்குச்சந்தையில் பெரிய முதலீடுகளை இப்போது தவிர்க்கவும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமானை (சுப்பிரமணியர்) வழிபடுவது மன தைரியத்தை அதிகரிக்கும்.
ரிஷபம்: 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் கிரகணம். தாயாரின் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் வரலாம், பொறுமை காக்கவும்.
பரிகாரம்: லலிதா சஹஸ்ரநாமம் அல்லது அம்பாள் வழிபாடு குடும்பத்தில் அமைதியைத் தரும்.
மிதுனம்:
மிகவும் சிறப்பான பலன்கள்! 3-ம் இடமான தைரிய ஸ்தானத்தில் நிகழும் இந்த கிரகணம், உங்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும். கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் முடிவுகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.
பரிகாரம்: ஏழைகளுக்கு இனிப்பு அல்லது பழங்களை தானம் செய்யுங்கள்.
கடகம்: உங்களின் 2-ம் இடமான தனம் மற்றும் வாக்கு ஸ்தானத்தில் கிரகணம். பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. நீங்கள் நல்லெண்ணத்துடன் பேசினாலும் அது தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். திடீர் செலவுகள் ஏற்படும்.
பரிகாரம்: கிரகண நேரத்தில் சந்திரனை தியானிக்கவும் அல்லது 108 முறை 'ஓம் நமசிவாய' என ஜபிக்கவும்.
சிம்மம்: உங்கள் ஜென்ம ராசியிலேயே கிரகணம் நிகழ்கிறது! உடல் ரீதியாக நீங்கள் ஆரோக்கியமாக இருந்தாலும், மனதில் இனம் புரியாத சோர்வும், மன அழுத்தமும் ஏற்படலாம். கோபத்தைக் குறைப்பது நல்லது.
பரிகாரம்: கிரகணம் முடிந்த மறுநாள் சிவன் கோயிலுக்குச் சென்று ருத்ராபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு.
கன்னி: 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் கிரகணம். காரியத் தடைகள் மற்றும் தூக்கமின்மை பிரச்சனை வரலாம். தேவையில்லாத நீண்ட தூரப் பயணங்களைச் சில நாட்களுக்கு தள்ளி வைப்பது நல்லது.
பரிகாரம்: விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது உங்களுக்குப் பாதுகாப்பு கவசமாக அமையும்.
துலாம்:
பண மழை பொழியும்! 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்கிறது. நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த லாபம் கைக்கு வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்: துர்கா அஷ்டகம் படித்து அம்பாளை வழிபடவும்.
விருச்சிகம்: 10-ம் இடமான கர்ம ஸ்தானத்தில் கிரகணம் உங்களின் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகளை ஏற்கத் தயாராக இருங்கள்.
பரிகாரம்: தினமும் அனுமன் சாலிசா படிப்பதன் மூலம் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.
தனுசு: 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் கிரகணம். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. ஆன்மீகப் பயணங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும். எனினும், தியானம் மற்றும் மந்திர ஜெபங்களுக்கு இது உகந்த காலம்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம் அல்லது குரு சரித்திரம் படிக்கவும்.
மகரம்: 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்கிறது. வாகனம் ஓட்டும் போதும், இயந்திரங்களைக் கையாளும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறிய உடல்நலப் பிரச்சனைகளையும் அலட்சியப்படுத்த வேண்டாம்.
பரிகாரம்: 'ஓம் நமசிவாய' (சிவ பஞ்சாட்சரி மந்திரம்) மந்திரத்தை முடிந்தவரை அதிகமாக ஜபிக்கவும்.
கும்பம்: 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தில் கிரகணம். கணவன்-மனைவி அல்லது தொழில் கூட்டாளிகளிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். விட்டுக்கொடுத்துச் செல்வது குடும்ப அமைதியைக் காக்கும்.
பரிகாரம்: நவக்கிரக ஸ்தோத்திரம் படிக்கவும், பசுவிற்கு அகத்திக்கீரை தரவும்.
மீனம்:
எதிரிகள் வீழ்வார்கள்! 6-ம் இடமான ஸ்தானத்தில் நிகழும் இந்த கிரகணம், வழக்குகள் அல்லது சொத்து விவகாரங்களில் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். உங்களின் போட்டியாளர்களை எளிதில் வெல்வீர்கள். நாள்பட்ட நோய்களில் முன்னேற்றம் தெரியும்.
பரிகாரம்: அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வரவும்.
கிரகண காலத்தில் கவனிக்க வேண்டிய விதிகள் மற்றும் நடைமுறை தளர்வுகள்
நமது வாழ்வியல் இயற்கையோடு பின்னிப் பிணைந்தது. ஆனால் கால, தேச, சூழ்நிலைகளுக்கு ஏற்ப சாஸ்திர விதிகளை அனுசரித்துப் பின்பற்றலாம் என்பதையும் நமது முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்:
-
கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு குறிப்பு மற்றும் விதிகளில் தளர்வு: இந்தியாவில் இந்த கிரகணம் சில நிமிடங்கள் மட்டுமே (இறுதிப் பகுதி) தெரியும் என்பதால், அந்தச் சிறு நேரம் கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக ஓய்வெடுங்கள். கிரகணம் அதிக நேரம் தெரியும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் அந்த நேரம் முழுவதும் வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.
சாஸ்திர விதிகளில் காலமாற்றத்திற்கு ஏற்ப தளர்வு (தேச கால வர்த்தமானம்): பழங்காலத்தில் கழிப்பறைகள் வீட்டிற்கு வெளியே அல்லது தொலைவில் அமைக்கப்பட்டிருந்தன. கிரகண நேரத்தில் வெளியே செல்வதால் கதிர்வீச்சின் பாதிப்பு ஏற்படும் என்பதற்காகவே, அப்போது கழிப்பறை செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற கடுமையான விதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இன்றைய காலகட்டத்தில் நமது வீடுகளுக்குள்ளேயே (படுக்கையறையுடன் இணைக்கப்பட்ட - Attached Bathrooms) கழிப்பறைகள் உள்ளன. எனவே, கிரகண நேரத்தில் தேவைப்பட்டால் வீட்டிற்குள் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. கால, தேச, சூழ்நிலைகளுக்கு ஏற்ப நமது வாழ்க்கை முறைக்குத் தகுந்தவாறு இத்தகைய நடைமுறை மாற்றங்களைச் செய்து கொள்வது சாஸ்திர விரோதம் ஆகாது. கர்ப்பிணிகள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். கூர்மையான பொருட்களை (கத்தி, கத்தரிக்கோல்) பயன்படுத்துவதைத் மட்டும் தவிர்ப்பது நல்லது. - உணவு மற்றும் தர்ப்பைப்புல்: தீட்டு (சூதகம்) தொடங்கியதிலிருந்து உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். கிரகணத்தின் போது காற்றில் பாக்டீரியாக்கள் வேகமாகப் பெருகும் என்பதால், சமைத்த உணவுகள் மற்றும் குடிநீரில் தர்ப்பைப்புல் போடும் வழக்கம் உள்ளது. தர்ப்பைப்புல்லில் உள்ள இயற்கையான கிருமிநாசினி தன்மை உணவை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது.
- மந்திர ஜெபம்: கிரகண நேரம் என்பது ஒரு சிறந்த ஆன்மீக நேரம். இந்த நேரத்தில் செய்யப்படும் மந்திர ஜெபங்கள் அல்லது பிரார்த்தனைகள் சாதாரண நாட்களை விட கோடி மடங்கு அதிக பலனைத் தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஜோதிட பகுப்பாய்வு: சந்திரன் மற்றும் கேது சேர்க்கையின் மன ரீதியான தாக்கம்
வேத ஜோதிடத்தில், சந்திரன் நமது மனம், தாய் மற்றும் உணர்ச்சிகளைக் குறிக்கிறார். மறுபுறம் கேது என்பது பற்றின்மை, தனிமை, பயம் மற்றும் மோட்சத்தின் காரகன். இந்த சந்திர கிரகணத்தின் போது கேது சந்திரனை மறைப்பதால், நமது மனதிற்குள் பின்வரும் உளவியல் மாற்றங்கள் ஏற்படலாம்:
- தாழ்வு மனப்பான்மை: திடீரென தன்னம்பிக்கை குறைவதைப் போல உணர்வீர்கள். மற்றவர்களுடன் பழகத் தயக்கம் ஏற்படும்.
- அறியாத பயம்: எதிர்காலத்தைக் குறித்த தேவையற்ற கவலைகளும், பாதுகாப்பற்ற உணர்வும் மனதை ஆக்கிரமிக்கலாம்.
- தனிமையை விரும்புதல்: அன்றாட வேலைகளில் நாட்டம் குறைந்து, யாரிடமும் பேசாமல் தனிமையில் இருக்கத் தோன்றும்.
- ஆன்மீக விழிப்புணர்வு: இந்த சேர்க்கையின் மிகச் சிறந்த பலன் என்னவென்றால், உங்கள் மனம் இயற்கையாகவே ஆன்மீகம், தியானம் மற்றும் இறை பக்தியை நோக்கி ஈர்க்கப்படும்.
இந்த கிரகணத்தின் தாக்கம் சுமார் 6 மாதங்கள் வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் மன வலிமையைப் பெற சிவபெருமானை வழிபடுவது மிகச் சிறந்த பரிகாரம். கிரகணம் என்பது ஒரு இயற்கையான சுழற்சி, எனவே இதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. துல்லியமான பலன்கள் உங்களின் ஜனன ஜாதகத்தின் தசா புத்திகளைப் பொறுத்தும் மாறுபடும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
கே: கிரகணம் முடிந்தவுடன் வீட்டில் என்ன செய்ய வேண்டும்?
ப: கிரகணம் விட்டவுடன் (மோட்சம்), வீட்டைச் சுத்தமாகக் கழுவி, தலைக்குக் குளிக்க வேண்டும். பின்னர் பூஜை அறையைச் சுத்தம் செய்து, விளக்கேற்றி வழிபட்ட பின்னரே புதிதாகச் சமைத்த உணவைச் சாப்பிட வேண்டும்.
கே: கிரகண தீட்டு அல்லது சூதகம் என்றால் என்ன?
ப: கிரகணம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே இயற்கையில் எதிர்மறை ஆற்றல் பரவத் தொடங்கும். இந்த நேரத்தையே தீட்டு அல்லது சூதகம் என்கிறோம். சந்திர கிரகணத்திற்கு 9 மணி நேரத்திற்கு முன்பாகவே தீட்டு தொடங்கிவிடும்.
கே: கிரகணத்தின் போது தூங்கலாமா?
ப: ஆரோக்கியமான நபர்கள் கிரகணத்தின் போது தூங்குவதைத் தவிர்த்து, இறை தியானம் மற்றும் மந்திர ஜெபங்களில் ஈடுபட வேண்டும். எனினும், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த விதியில் விலக்கு உண்டு; தேவைப்பட்டால் அவர்கள் ஓய்வெடுக்கலாம்.
முடிவுரை: கிரகணம் என்பது பயப்படுவதற்கான நேரம் அல்ல; இது இயற்கையாகவே நம் மனதையும், உடலையும், ஆன்மாவையும் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகக் கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பு. நேர்மறை எண்ணங்களுடன், இறைவனின் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த காலத்தைக் கடந்து செல்வோம்.


The Hindu Jyotish app helps you understand your life using Vedic astrology. It's like having a personal astrologer on your phone!
Are you searching for a detailed Panchang or a daily guide with good and bad timings, do's, and don'ts? Our daily Panchang service is just what you need! Get extensive details such as Rahu Kaal, Gulika Kaal, Yamaganda Kaal, Choghadiya times, day divisions, Hora times, Lagna times, and Shubha, Ashubha, and Pushkaramsha times. You will also find information on Tarabalam, Chandrabalam, Ghata day, daily Puja/Havan details, journey guides, and much more.